மதங்களும், மொழிகளும் நம்மை ஒருங்கிணைத்துள்ளன: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரை..!

டெல்லி: மதங்களும், மொழிகளும் நம்மை ஒருங்கிணைத்துள்ளன என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 74வது குடியரசு தினவிழா நாளை (26ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய நிலையில் மிகுந்த எழுச்சியுடனும், கோலாகலத்துடனும் இவ்விழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மூவர்ண கொடியேற்றுகிறார். இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்; குடியரசு தினத்தை கொண்டாடும் இந்நேரத்தில் நமது சாதனைகளை நாம் ஒன்றாக கொண்டாடுவோம். நாம் அனைவரும் இந்தியர்கள், பல மதங்களும், மொழிகளும் நம்மைப் பிரிக்கவில்லை, ஒன்றிணைத்துள்ளன. நாம் ஜனநாயக குடியரசாக வெற்றி பெற்றிருக்கிறோம் இதுதான் இந்தியாவின் சாராம்சம். இந்த நன்னாளில் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றி. இந்தியாவின் பயணம் பல நாடுகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது. மகாத்மா காந்தியின் குறிக்கோளின் படி அவரது வழியில் நாம் சுதந்திரத்தை அடைந்தோம். அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் முதல் இன்றுவரை நமது பயணம் ஆச்சரியமானது.

தேசிய கல்விக்கொள்கையில் கல்வி செயல்முறையை விரிவுபடுத்துவதிலும், ஆழப்படுத்துவதிலும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய கல்விக்கொள்கையில் லட்சிய மாற்றங்கள் பல செய்யப்பட்டுள்ளன. ககன்யான் திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ககன்யான் திட்டம் மூலமாக நமது நாடு மனிதர்களை ஏற்றிச்செல்லும் விண்கலத்தை விண்ணில் ஏவ உள்ளது. நாம் நட்சத்திரத்தில் கூட கால் பதிப்போம் என்று நம்பிக்கை உள்ளது. கரீப் கல்யாண் யோஜனா திட்டம் ஏழைகளுக்கு கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிவாரணம் வழங்கியுள்ளது. நமக்கு அரசியல் சாசனத்தை வழங்கிய டாக்டர் அம்பேத்கருக்கு நாம் என்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.

நமது அரசியல் சாசனம் கடந்த காலத்தில், நிகழ்காலத்தில், எதிர்காலத்தில் என எப்போதும் வழிகாட்டியாகவே இருக்கிறது. அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தொலைநோக்குப் பார்வை, இந்தியாவை நம்பிக்கையான தேசமாக மாற்ற வழிவகுத்தது இவ்வாறு கூறினார்.

Related Stories: