சின்னம் கிடைக்காததால் இபிஎஸ், ஓபிஎஸ் அணியில் போட்டியிட நிர்வாகிகள் தயக்கம்: வேட்பாளர்கள் கிடைக்காமல் இரு அணியினரும் திணறல்.!

சென்னை: கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது, சின்னம் கிடைக்காதது போன்ற காரணங்களால் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் அணியில் போட்டியிட நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் இரு அணியிலும் வேட்பாளர்கள் கிடைக்காமல் திணறி வருகின்றனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக 4 அணிகளாக உடைந்துள்ளன. அதில் அதிமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் உரிமை கொண்டாடி வருகின்றனர். 3 பேரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். வழக்கு விசாரணையில் உள்ளது. அதேநேரத்தில் தற்போது அதிமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேரடியாக நிர்வாகிகள் என்ற முறையில் உரிமை கேட்டு போராடி வருகின்றனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக இருவரும் காத்திருக்கின்றனர். இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் அதிமுக எடப்பாடி அணி சார்பில் வேட்பாளரை நிறுத்த ஆலோசனை நடந்து வந்தது. அதில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை நிறுத்த முடிவு செய்தனர். அவரும் சம்மதித்திருந்தார். அதேநேரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாசன் ஆதரவு தெரிவித்திருந்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருந்தனர். எடப்பாடி பழனிச்சாமியே நேரடியாக அண்ணாமலையிடம் போனில் பேசி ஆதரவு கேட்டார். அவரும் சம்மதித்தார். அதிமுக நிர்வாகிகள், பாஜக தலைமை கழகத்துக்கு வந்து ஆதரவு கேட்டவுடன் ஆதரவு தருவதாக அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்தநிலையில்தான் திடீர் திருப்பமாக அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அவர்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும், மேற்கு மண்டலத்தில் பன்னீர்செல்வத்துக்கு செல்வாக்கு இல்லாததால் அவர் போட்டியிட மாட்டார் என்று எடப்பாடி கணக்குப் போட்டார். ஆனால் அவரோ யாரும் எதிர்பாராத விதமாக போட்டி உறுதி என்று கூறிவிட்டார். தனக்குத்தான் இரட்டை இலை கிடைக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் வேட்பாளரை நிறுத்துவதற்கான ஆலோசனைகளை தீவிரப்படுத்தி விட்டார். அதிமுகவில் இரு அணியினரும் இரட்டை இலை கேட்டு நிற்பதால், இருவருக்கும் சின்னம் கிடைக்காது என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் இரு அணியினரும் தனித்துப் போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த தமிழக முன்னேற்றக் கழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை எடப்பாடியை ஆதரிக்க முடியாது. பாஜக என்ன நிலை எடுக்கிறதோ அதுதான் எங்கள் நிலை என்று கூறிவிட்டனர். ஆனால் ஆதரவு தருவதாக கூறியிருந்த அண்ணாமலை, பன்னீர்செல்வம் அறிவிப்பை அடுத்து ஆதரவு தெரிவிப்பதை தள்ளி வைத்து விட்டார். அவர் என்ன நிலை எடுப்பது என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளார். மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கிறார். இதனால் பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தர தயக்கம் காட்டி வருகின்றன. இதனால் எடப்பாடி அணியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த பலரும் இப்போது பின்வாங்க ஆரம்பித்து விட்டனர்.

கே.வி.ராமலிங்கம்தான் வேட்பாளர் என்று கூறப்பட்டு. வேலைகளும் தொடங்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அவர் போட்டியிட மறுத்து விட்டார். மேலும் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவும் போட்டியிடவில்லை. போட்டியிட்டால் தோல்வி உறுதி. அதுவும் டெபாசிட் கிடைக்காவிட்டால், கட்சியில் மட்டுமல்ல உள்ளூரிலும் அசிங்கப்பட வேண்டிய நிலை உருவாகிவிடும் என்பதால் அதிமுக நிர்வாகிகள் பலரும் பீதியடைந்து விட்டனர். இதனால் விட்டால் போதும் என்று சீட் கேட்க யாரும் முன் வரவில்லை. இதனால்தான் விருப்ப மனு கொடுக்கலாம் என்ற அறிவிப்பை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அதேநேரத்தில் பன்னீர்செல்வமும், முதலியார் சமூக இயக்கத்தில் உள்ள ஒருவரை நிறுத்த ஆலோசித்து வருகிறார். அல்லது ஈரோடு மாவட்ட செயலாளர் முருகானந்தத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். இருவரும் வேட்பாளர் கிடைக்காமல் திணறி வருகின்றனர். இதனால் வேட்பாளர் குறித்து இன்று பிற்பகலில் முக்கிய அறிவிப்பை பன்னீர்செல்வம் வெளியிடுகிறார். இவ்வாறு இரு அணியிலும் வேட்பாளர் கிடைக்காமல் திணறி வருவது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் இந்த தேர்தல் குறித்து சசிகலா இதுவரை வாய் திறக்கவில்லை. அவர் இந்த தேர்தலில் தனது பங்களிப்பை காட்டாமல் உள்ளார். அதேநேரத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக தொடங்கியுள்ள டிடிவி தினகரன் தானே போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனாலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவில் வேட்பாளர் கிடைக்காமல் திணறும் சூழ்நிலை தற்போது உருவாகியிருப்பது தொண்டர்களை கவலையடையச் செய்துள்ளது.

Related Stories: