மகளை பின்தொடர்ந்த விவகாரம்; வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து தந்தை உள்பட 3 பேர் கைது: செங்கல்பட்டு அருகே பயங்கரம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே இளம்பெண்ணை பின்தொடர்ந்த விவகாரம் தொடர்பாக வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு அடுத்த அம்மணம்பாக்கம் கொள்ளைமேடு பகுதியை சேர்ந்தவர் அன்பு (45). இவரது மகளிடம், செங்கல்பட்டு மேலமையூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் கார்த்திக் (23) என்பவர் போன் நம்பர் கேட்டதாகவும், அந்த பெண்ணை அவ்வப்போது பின்தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அந்த பெண், வீட்டுக்கு சென்று தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் அன்பு ஆத்திரமடைந்தார். அதே பகுதியை சேர்ந்த முனியன், சங்கர் ஆகியோருடன் நேற்று கார்த்திக்கை சந்தித்து, ‘என் மகளிடம் வம்பு செய்யும் வேலை வைத்து கொள்ளாதே’ என்று கூறியதோடு, எச்சரித்துள்ளார். அந்த நேரத்தில் ஆத்திரத்தில் அன்பு வைத்திருந்த கத்தியை பறித்து கார்த்திக்கை சரமாரியாக குத்திவிட்டு தப்பினார். ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து அதே பகுதியில் பதுங்கியிருந்த அன்பு, முனியன், சங்கர் ஆகியோரை கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: