ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: போட்டியிடுவதா? இல்லையா? வரும் 27-ம் தேதி முடிவு: டி.டி.வி தினகரன்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அமமுக நிர்வாகிகளுடன் டி.டி.வி தினகரன் ஆலோசனை நடத்தி வருகின்றார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

மேலும், இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் நேற்று ஜி.கே.வாசனை சந்தித்து பேசிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இதேபோன்று கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. கட்சிக்கு 1,204 வாக்குகள் கிடைத்தன. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அ.ம.மு.க. நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை டி.டி.வி.தினகரன் அறிவிப்பார் என்று கூறப்படுகின்றது.

இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து வரும் 27-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என டி.டி.வி.தினகரன் பேட்டியில் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அமமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பழனிசாமி, பன்னீர்செல்வம் இருதரப்பினரும் இடைத்தேர்தலில் போட்டியிட்டால் இரட்டை இலை முடக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். பணபலத்தை நம்பிதான் இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு அதிமுக போட்டியிடும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகரில் தான் போட்டியிட்டதுபோல் இடைத்தேர்தலிலும் போட்டியிட தயார் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: