3வது காலாண்டில் பாங்க் ஆப் மகாராஷ்டிரா லாபம் ரூ.775 கோடி

சென்னை: கடந்த டிசம்பருடன் முடிந்த நடப்பு நிதியாண்டின் 3ம் காலாண்டில், மகாராஷ்டிரா வங்கியின் லாபம் இரண்டு மடங்கிற்கு மேல் உயர்ந்து ரூ.775 கோடியாக உள்ளது. பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி, புனேயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கியின் 3ம் காலாண்டு நிதிநிலை விவரங்களை, இதன் நிர்வாக இயக்குநர் ஏ.எஸ்.ராஜீவ் வெளியிட்டார். இதன்படி, கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த நடப்பு நிதியாண்டுக்கான 3ம் காலாண்டில், வங்கியின் நிகர லாபம் ரூ.775 கோடியாக உள்ளது. இதுபோல், வங்கியின் மொத்த கடன் வழங்கல் முந்தைய ஆண்டை விட 22 சதவீதம் உயர்ந்து ரூ.1,56,962 கோடியாக உள்ளது.

இதில் நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் 25 சதவீதம், சில்லரை கடன்கள் 23 சதவீதம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வழங்கிய கடன் 22 சதவீதம், விவசாய கடன் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த டெபாசிட்கள் 12 சதவீதம் உயர்ந்து ரூ.2,08,436 கோடியாக உள்ளது. நிதிநிலை விவரங்களை வெளியிட்டு பேசிய வங்கியின் நிர்வாக இயக்குநர் ஏ.எஸ்.ராஜீவ், ‘‘நிகர லாபம் 138.76 சதவீதம் அதிகரித்துள்ளது. இயக்க லாபம் 35.94 சதவீதம் உயர்ந்து ரூ.1,580 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.1,162 கோடியாக மட்டுமே இருந்தது. நிகர வட்டி வருவாய் 29.65 சதவீதம் உயர்ந்து ரூ.1,980 கோடியாகவும், மொத்த வருவாய் ரூ.4,770 கோடியகவும் அதிகரித்துள்ளது. நிகர வராக்கடன் 2.94 சதவீதமாக குறைந்துள்ளது,’’ என்றார்.

Related Stories: