வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் சிறப்புரையாற்றிய மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் மாணவ, மாணவியர், இளைஞர்கள்  அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்று உயரிய நிலையை அடைகின்ற நோக்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் உள்ள மாநிலக் கல்லூரியில் இந்தப் பயிற்சி மையம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  

இந்தக் கட்டணமில்லா பயிற்சி மையத்தினை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்ட மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களுக்கும். அலுவலர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சட்டமன்ற உறுப்பினராக ஆனவுடன் கொரோனா காலத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி தந்தவர் நம்முடைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்கள். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் பங்கேற்ற 69 மெகா வேலைவாய்ப்பு முகாம்களும் மற்றும் 1000 சிறு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளது.

இதுவரையில், 1,12,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  வருகிற மே மாதத்திற்குள் ஒன்றரை இலட்சம் இலக்கை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 11 தொழில் பயிற்சி நிலையங்கள் (ITI) தொடங்கி உள்ளோம். டாடா கன்சல்டன்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு தலா ரூ.30 கோடி மதிப்பீட்டில் அனைத்து தொழில் பயிற்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக ரூ.2800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குரூப் 1 மற்றும் குரூப் 2 போன்ற தேர்வுகளில் ஆர்வம் காட்டும் அளவுக்கு ஒன்றிய அரசு வேலைவாய்ப்புகளுக்கான யூ.பி.எஸ்.சி.  போன்ற போட்டித் தேர்வுகளில் அக்கறை காட்டுவதில்லை. ஒன்றிய அரசு பணிகளில் 2.1 சதவீதம் நபர்கள் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகின்றனர். இரயில்வே மற்றும் வங்கி போன்ற மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சேர்வதற்கு ஏதுவாக போட்டித் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த மாநிலக் கல்லூரியில் சுமார் ரூ.64 கோடி மதிப்பீட்டில் 2000 நபர்கள் அமரக்கூடிய அளவிலான கலையரங்கம் கட்டப்பட உள்ளது.  

இந்தக் கல்லூரியில் சிற்றுண்டி உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  விரைவில் அதற்கான பணிகளை நானே தொடங்கி வைப்பேன்.  மாணவர்கள் பள்ளி, கல்லூரி படிப்புகளுடன் வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் தங்களைத் தயார்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இதுபோன்ற போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக் கையேட்டினை மாணவ, மாணவியருக்கு வழங்கினார். முன்னதாக, போட்டித் தேர்வுகளுக்கான புத்தகக் கண்காட்சியினைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மேலும், இக்கல்லுாரியில் நிரந்தர பயிற்சி மையம் தொடங்கப்பட்டு இளைஞர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தினந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2.30 முதல் 5.30 வரையும், வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடத்தப்பட உள்ளது. இதனால் இப்பகுதியை சார்ந்த மாணவர்கள் அதிக அளவில் பயன்பெறுவர். இந்த பயிற்சி வகுப்புகளின் ஒரு பகுதியாக தொடர் தேர்வுகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். இங்கு சிறிய நூலகமும் அமைக்கப்படும். அதனைத் தொடர்ந்து SSC, TNPSC தேர்வுகள், TNUSRB, IBPS மற்றும் RRB போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தொடர்ச்சியாக பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வெ.கணேசன் அவர்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.முகமது நசிமுத்தீன், இ.ஆ.ப., அவர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளர் திரு.கொ.வீரராகவ ராவ், இ.ஆ.ப., அவர்கள், மாநிலக் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இராமன் அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார் அவர்கள், மண்டலக் குழுத் தலைவர் திரு.எஸ்.மதன்மோகன் அவர்கள், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) திருமதி ஆ.ஜோதிமணி  அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: