உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான மேல்முறையீட்டு தேர்தல் வழக்கை விசாரிக்க முகாந்திரம் இல்லை என தெரிவித்த உச்ச நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து நேற்று முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும் தற்போதையை விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதற்கிடையில், ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர் தொடர்ந்த மற்றொரு தேர்தல் வழக்கில்,‘‘உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவர் மீதான வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும், அதற்கு தெரிவித்த ஆட்சேபங்களை அரசு ஏற்கவில்லை. எனவே உதயநிதி வேட்புமனுவை ஏற்றதும், அதன் மூலம் போட்டியிட்டு வெற்றிபெற்றதும் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து பிரேமலதா தொடர்ந்த மேற்கண்ட வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி ஸ்டாலின் தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தன் மீதான வழக்கு விவரங்களை மறைக்கவில்லை என்றும், அதனால் தான் வேட்புமனு மீதான ஆட்சேபங்களை ஏற்காத தேர்தல் ஆணையம் தனது வேட்பு மனுவை ஏற்று போட்டியிட அனுமதித்ததாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆர்.பிரேமலாதா தொடர்ந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்து அதனை தள்ளுபடி செய்தும், மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்தும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆர்.பிரேமலதா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் வழக்கானது தேவையில்லாத ஒன்றாகும். அதில் விசாரிக்க எந்தவித முகாந்திரமும் கிடையாது என தெரிவித்த தலைமை நீதிபதி, ஆர்.பிரேமலதா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Related Stories: