தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கியது நேபாள விமான விபத்தில் 5 இந்தியர் உட்பட 72 பேர் பலி: காணாமல் போன 4 பேரின் சடலங்களை தேடும் பணி தீவிரம்

காத்மண்ட்: நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் 5 இந்தியர் உட்பட 72 பேர் பலியாகினர். நேபாளத்தில் நேற்று முன்தினம் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எட்டி ஏர் லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 68 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணித்தனர். பொக்காராவில் புதிதாக திறக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் செட்டி ஆற்றுக்கும் பழைய விமான நிலையத்துக்கும் இடையே தரையில மோதி தீப்பிடித்து வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 5 இந்தியர்கள் உட்பட 72 பேரும் உடல் கருகி பலியானார்கள். தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விமான விபத்தில் இறந்தவர்களின் 68 உடல்கள் மீட்கப்பட்டது.  இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக நேற்று காலை மீண்டும் மீட்பு பணிகள் தொடங்கின. காணாமல் போன மேலும் 4 பேரின் சடலங்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

விபத்தில் இறந்த 5 இந்தியர்களில் 4 பேர் பொக்காராவில் பாராகிளைடிங்கில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தனர். 68 சடலங்கள் மீட்கப்பட்டதில் இதுவரை 35 பேரின் சடலங்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

* கருப்பு பெட்டி மீட்பு

நேபாளத்தில் விபத்துக்குள்ளான எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்பு பெட்டியானது விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 300 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கில் விழுந்துகிடந்த காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் விமான தரவு ரெக்கார்டர் ஆகியவற்றை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். இதன் மூலமாக விமான விபத்துக்கான காரணங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கருப்பு பெட்டி நேபாள விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

* கடைசி விநாடிகள் பயணி எடுத்த வீடியோ

விபத்துக்குள்ளான விமானத்தில் ஜன்னலோர சீட்டில் இருந்த பயணி ஒருவர் விமானம் தரைஇறங்க போகும் காட்சியை வீடியோ எடுத்துள்ளார். அதில், கீழே வீடுகள் எல்லாம் தெரிகிறது. சில விநாடிகளில் விமானம் செங்குத்தாக தரையை நோக்கி பாய பயணிகளின் ஓலமும், பினனர் விமானம் நொறுங்கி தீப் பிழம்பாக மாறியதும் பதிவாகி இருக்கிறது. பேஸ்புக் லைவில் ஒளிப்பரப்பான இந்த வீடியோ தற்போது சமூக இணையதளங்களில் வைரலாகி உள்ளது.

Related Stories: