தாய்ப்பால் என்னும் அமிர்தம்!

நன்றி குங்குமம் தோழி

ஒரு பெண் ஆனவள் தன் தாய்ப்பாலைக் கொடுத்து தனது குழந்தையின் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் திறனைப் பெற்றிருப்பது இயற்கை அளித்த அற்புத வரமாகும். செயற்கையான பவுடர் பால் (Formula milk) குடித்து வளரும் குழந்தைகளை விட, தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்நாளின் முதல் ஆண்டில் குறைவான தொற்று மற்றும் ஒவ்வாமையே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. பச்சிளம் குழந்தைகளுக்காக தாயிடம் இயற்கையாக சுரக்கும் தாய்ப்பாலில் சரியான விதத்தில் ஊட்டச்சத்துக்களும் நோய்த் தொற்றுகளுக்கு எதிராக செயல்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முக்கியமான புரதங்களும் உள்ளதால் இது அக்குழந்தைகள் பிற்காலத்தில் ஆரோக்கியமாக வளர பெரிதும் உதவுகிறது.

தாய்ப்பால் சுரப்பு

கர்ப்பகாலத்தில் மார்பக வளர்ச்சி அதிகரிக்கிறது. ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோனின் அளவு அதிகமாவதன் காரணமாக மார்பக காம்பு மற்றும் அதை சுற்றியுள்ள ஏரியோலார் திசுக்கள் அளவில் பெரிதாகிறது. புரோஜஸ்ட்ரான்  சுரப்பு அதிகமாவதன் காரணமாக பால் சுரப்பு கோளங்கள் அதிகமாக வளர்ச்சியடைகின்றன. கர்ப்பகால இறுதியில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் புரோலாக்டின் சுரப்பியைத் தூண்டுகிறது. இந்த புரோலாக்டின் மகப்பேற்றினைத் தொடர்ந்து மார்பகங்களில் பால் சுரத்தலைத் தூண்டுகிறது.

மார்பகத்திலிருந்து வெண்மஞ்சள் நிறத்தில் வெளிப்படும் திரவம் கொலஸ்ட்ரம் [colostrum] எனப்படும் சீம்பால் ஆகும். இதில் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்பு பொருட்கள் [Immunoglobulin], நீர், புரதம், தாது உப்புகள் ஆகியன உள்ளன. இச்சுரப்பு மகப்பேறு அடைந்த பின் மூன்று நாட்கள் வரை சுரக்கும். அதன்பின் சாதாரணமான பால் சுரப்பாக  

மாற்றமடைகிறது.

ஆயுர்வேதத்தில் தாய்ப்பால்

“ரசா பிரசாதோ மதுரா பவாகார நிமிந்தஜ கிருத்சன: தேகாத் ஸ்தானௌ ப்ராப்த ஸ்தன்யம் இதி அபி தீயதே!’’உணவு செரிமானத்திற்கு பிறகு உற்பத்தியாகும் ரசம், வியான வாயுவால் உடல் முழுவதும் பரவி மார்பகத்தை சென்றடையும்போது ஸ்தன்யம் - தாய்ப்பால் [Breast milk] உருவாகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது..

அதேபோல் ஆயுர்வேத நூல்களில், ஸ்தன்யம் (தாய்ப்பால்) உருவாவதற்கான காரணங்கள், ஸ்தனப் ப்ரவர்த்தி (அல்லது பால் வெளியேற்றம்), தாத்ரி (செவிலியர்), தாத்ரி-பரிக்ஷா (பால் கொடுக்கும் செவிலியர் பரிசோதனை), ஸ்தானபன-விதி (தாய்ப்பால் வழிமுறைகள்), ஸ்தன்ய சம்பத் (தகுதிகள்), ஸ்தன்ய க்ஷய ஹேது (பால் குறைவதற்கான காரணங்கள்), ஸ்தன்ய விரித்தி திரவியங்கள் (பாலின் அளவை அதிகரிக்கும் மருந்துகள்), ஸ்தன்ய அபநாய காலம் (தாய்ப்பால் நீக்கும் காலம்), தாய்ப்பாலின் அசாதாரணங்கள் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் போன்றவை விரிவாக விவாதிக்கப்படுகின்றன.

சுஷ்ருதாச்சாரியார், குழந்தையின் எண்ணம், பார்வை அல்லது தொடுதல் மற்றும் உடல் தொடர்பு போன்ற பால் வெளியேற்றத்திற்கான காரணிகளை தெளிவாக கூறியிருந்தாலும் குழந்தை மீதான பாசமே முக்கியமாகக் காரணமாக விளக்கியுள்ளார்.

தாய்ப்பாலூட்டுவதின் மூலம் தாய்க்கு ஏற்படும் நன்மைகள்

குழந்தை பிறந்த பிறகு கூடிய சீக்கிரமே தாய்ப்பால் கொடுப்பது சுகப்பிரசவம் செய்த தாயைப் போலவே சிசேரியன் செய்யப்பட்ட தாய்க்கும் நன்மைகள் கொடுக்கும். ய்ப்பால், குழந்தைக்கும் தாய்க்கும் இடையிலான பிணைப்பை ஊக்குவிக்கிறது.தாய்ப்பால் கொடுப்பதால் Oxytocin எனும் ஹார்மோன் வெளியாகி கருப்பை சுருங்குவதற்கும் உதவுகிறது.

தாய்ப்பால் ஏன் சிறந்தது?

மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் நிறைந்துள்ளது. தாய்ப்பால் ஊட்டப்பட்ட குழந்தைகள் பல்வேறு வகையான நுண்ணறிவு சோதனைகளில் சிறப்பாக செயல்படுகின்றனர்.கண் செயல்பாட்டையும் மேம்படுத்துகின்ற சில கொழுப்பு அமிலங்கள் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது. அவை செயற்கைச் சூத்திரங்களின் (Formula milk) பாலில் கிடையாது.

தாய்ப்பால் எளிதில் செரிக்கக்கூடிய உணவாகும். ஏனெனில்,  குழந்தைகளின் மென்மையான செரிமான அமைப்பில் தாய்ப்பாலில்  உள்ள புரதங்கள் எளிதில் செரிமானமாகும். குழந்தைகளுடைய வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கான அனைத்து கூறுகளையும் தாய்ப்பாலின் மூலம் பெற முடியும். தாய்ப்பாலில் ஆன்டிபாடிகள் (Antibodies) மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காரணிகள் நிறைந்துள்ளன. இது குழந்தைகளின் லேசான முதல் கடுமையான நோய்த் தொற்றுக்களை எதிர்க்கும் திறனுக்கு பெரிதும் உதவுகிறது.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இரைப்பை (Gastrointestinal) சுவாசக் கோளாறுகள், காது மற்றும் சிறுநீர் தொற்றுகள் கணிசமாகக் குறைந்து காணப்படும். தாய்ப்பாலிற்கு குழந்தைகளின் சொந்த நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பண்புகளும் உள்ளன.

சிறந்த தாய்ப்பாலின் குணம் மற்றும் தோற்றம்

ஆச்சார்யா சரகரின் கூற்றுப்படி, வெண்மையான நிறம், நல்ல மணம், மற்றும் சுவை கொண்ட தாய்ப்பால், தண்ணீரில் ஊற்றப்படும்போது சமமாக கலக்கும்போது அது சுத்தமான பாலின் அடையாளம் என்கிறார். இந்த பால் குழந்தைக்கு ஊட்டத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. ஆச்சார்யா சுஷ்ருதா, ஆற்றலில் குளிர்ச்சியானதும், சுத்தமானதும், அசுத்தங்கள் இல்லாததும், சங்கு போன்ற நிறமும், சுவையில் இனிமையானதும், தண்ணீரில் சமமாக கலந்தும், தண்ணீரில் கலந்தால் நுரையோ அல்லது கோடுகளோ ஏற்படாது உள்ளதும் நல்ல தாய்ப்பால் என்று விவரிக்கிறார். இந்த வகை பால் நல்ல ஆரோக்கியத்தையும், உடல் வளர்ச்சியையும், உடலுக்கு வலிமையையும் வழங்குகிறது என்று அவர் கூறுகிறார்.

பாலூட்டும் காலம்

சுகப்பிரசவத்தில் (Normal delivery) குழந்தை பிறந்து அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பாலூட்டுதல் ஆரம்பிக்கப்படவேண்டும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள், தாய் பிரசவத்திலிருந்து மீண்டவுடன் குழந்தையை மார்பகங்களில் வைக்க வேண்டும். இது தாய் தனது குழந்தையுடன் பிணைப்பை ஏற்படுத்தவும், பால்சுரப்பினை ஊக்குவிக்கவும் உதவுகிறது. தாய் வசதியாக அமர்ந்து குழந்தையின் தலையை சற்று உயர்த்தி பாலூட்ட வேண்டும். தாய் படுத்துக்கொண்டு குழந்தைக்கு பால் ஊட்டக்கூடாது. உறங்கும் குழந்தைக்கு பால் கொடுக்கக்கூடாது. ஏனெனில் அப்பால் நுரையீரலில் சென்று பல மூச்சு பிரச்சனைகளை உருவாக்க வாய்ப்புள்ளது.

தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையின் சரியான நிலை பின்வருமாறு

*குழந்தையின் முழு உடலையும் தாய் தாங்கவேண்டும்.

*குழந்தையின் தலை, கழுத்து மற்றும் முதுகு சமமாக  இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

*குழந்தையின் முழு உடலும் தாயின் கண்ணில் படுமாறு இருக்க வேண்டும்.

*குழந்தையின் வயிறு தாயின் வயிற்றைத் தொட வேண்டும்.

தாயின் மார்பில் குழந்தையின் இணைப்பு, நல்ல இணைப்பின் அறிகுறிகள்

*குழந்தையின் வாய் அகலமாக திறந்திருக்கும்.

*கீழ் உதடு வெளிப்புறமாக திரும்பியிருக்க வேண்டும்.

*குழந்தையின் கன்னம் தாயின் மார்பைத் தொட வேண்டும்.

*குழந்தையின் வாயினுள் காம்பின் பெரும்பகுதி இருக்க வேண்டும்.

தாய்ப்பால் குறைவதற்கான காரணங்கள்

ஸ்தன்யா என்பது ரஸ தாதுவின் உபதாது ஆகும். ஆயுர்வேதத்தில் பாலூட்டும் குறைபாட்டை ஸ்தன்யக்ஷயம் என்று குறிப்பிடுகிறார்கள். ஸ்தன்ய க்ஷயம் என்பது மார்பக நோய்களில் (ஸ்தனத்தின்  விக்ருதிகளில்) ஒன்றாகும். இங்கு ரச தாது க்ஷயம் (ஊட்டச்சத்து குறைபாடு) மற்றும் தாது துஷ்டி (மற்ற காரணங்கள்) காரணமாக ஸ்தன்யத்தின் அளவு குறைகிறது.

இங்கு மற்ற காரணங்களாக மன அழுத்தம், குழந்தை மீது பாசம் இல்லாதது, உண்ணாவிரதம் இருப்பது, (Diet control) போதுமானளவு உணவு உட்கொள்ளாதது, மிகவும் உலர்ந்த உணவு மற்றும் செயற்கை பானங்ககள் உட்கொள்வது, தேவையான ஊட்டச்சத்து இல்லாத உணவு, மீண்டும் குறுகிய காலத்தில் கர்ப்பமடைதல், அதிகமாக உடற்பயிற்சி செய்தல் ஆகியவை குறிப்பிடலாம்.

சில நேரங்களில் அதீத ஆர்வமுள்ள உறவினர்கள் தாய்க்கு போதுமான பால் இல்லை என்றும் பால் சப்ளிமெண்ட்ஸ் (Milk supplements) கொடுக்க வேண்டும் என்றும் நம்ப வைக்க முயற்சி செய்கிறார்கள். பெரும்பாலான தாய்மார்கள் சிசேரியன் செய்தவர்கள் கூட தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.அதற்கு தேவையானது பொறுமையும் விடாமுயற்சியும் மட்டுமே. குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது முக்கியம். சர்க்கரை கரைசல்கள் அல்லது வணிக ரீதியாகக் கிடைக்கும் பால் சப்ளிமெண்டஸ் போன்றவற்றை உடனே கொடுக்க கூடாது.

தாய்ப்பால் அதிகரிக்க செய்யவேண்டியவை

தாய்ப்பால் குறைபாட்டை சரி செய்வதற்கும்  தாய்ப்பாலை அதிகப்படுத்துவதற்கும் தாய்ப்பால் குறைவதற்கான காரணங்களை தவிர்ப்பதே முதல் வழி என்று ஆயுர்வேதம் கூறுகிறது. குழந்தை மார்பகத்தை எவ்வளவு அதிகமாக உறிஞ்சுகிறதோ, அவ்வளவு அதிகமாக பால் உற்பத்தியாகும். பிரசவத்திற்குப் பிறகு மூன்றாவது அல்லது நான்காவது நாளில், பால் வெளியேற்றம் தொடங்கிவிடும். தாயால் குழந்தையை வருடுவது அல்லது குழந்தை அழுவதைக் கேட்பதுகூட பால் வெளியேற்றத்தை அதிகரிக்கின்றது என்னும் விஷயம் குறிப்பாக சுவாரஸ்யமானது.

பால் சுரக்கும் மருந்துகள்

ஸ்தன்ய ஜனன த்ரெவ்யங்கள் அதாவது தாய்ப்பாலை அதிகரிக்கும் திறன் கொண்ட மருந்துகளை கஷாயம் செய்து குடிக்கலாம். அப்படி கஷாயம் செய்து குடிக்க ஆயுர்வேதம் கூறும் சில மருந்துகள் - வெட்டிவேர், அரிசி, நவரஅரிசி, நீர் முள்ளி, கரும்பு,  தர்ப்பை புல், நிலப்பூசணி, இலுப்பை, சதாவரி, நாரிகேலம், பூண்டு போன்றவற்றை கஷாயம் செய்து குடிக்கலாம்.

தாய்ப்பாலை அதிகரிக்க உதவும் இதர ஆயுர்வேத மருந்துகள்

விதாரியாதி கஷாயம், அஷ்வகந்தாதி லேகியம், தாது கல்ப லேகியம், சதாவரி லேகியம், த்ராக்ஷாதி லேகியம், ப்ரவல பஸ்பம், விதாரிகந்த சூர்ணம்.

தாய்ப்பாலுக்கு மாற்றாக என்ன கொடுக்கலாம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தான் உகந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இருந்தாலும் துரதிருஷ்டவசமாக சில சூழ்நிலைகளில் தாயால் குழந்தைக்கு பாலூட்ட முடியாத பட்சத்தில் பால் கொடுக்கும் செவிலித்தாயை அணுகலாம். அதுவும் இல்லாத பட்சத்தில் பசு அல்லது ஆட்டின் பாலை சில மருந்துகள் சேர்த்து காய்ச்சி கொடுக்கலாம். அதுவும் அளவாகவே கொடுக்க வேண்டும். இவை அனைத்தும் முடியாத பட்சத்தில் வணிக ரீதியாக கிடைக்கும் சப்லிமெண்ட் பால் கொடுக்கலாம். ஆனால் தாய்ப்பாலில் உள்ள ஆன்டிபாடிகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் இதில் கிடையாது. சரியான காரணம் இருந்தால் மட்டும் குழந்தை மருத்துவர் அறிவுரையின் பேரில், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் பால் சப்ளிமெண்டஸ் கொடுக்கலாம்.

பாலூட்டுதல் நிறுத்தும் காலம்

பாலூட்டுதல் படிப்படியாக நிறுத்தப்பட வேண்டும். அதன் பிறகு குழந்தைக்கு ஆடு அல்லது பசுவின் பால் லேசான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் கொடுக்க வேண்டும். 6. முதல் 12 மாத வயதிற்குள் குழந்தை திட உணவுகள் மற்றும் திரவங்களை பழக்கப்படுத்திய பிறகு பெரும்பாலான குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் அளவு குறைகிறது. தாய்ப்பால் கொடுப்பதினால் குழந்தைக்கும் தாய்க்கும் பல நன்மைகள் இருப்பதினால் என்றும் தாய்ப்பால் கொடுப்பதையே நாம் ஆதரிக்க வேண்டும்.

தொகுப்பு: உஷாநாராயணன்

Related Stories: