பணிகள் நிறைவடையாததால் தீவுத்திடல் பொருட்காட்சி அடுத்த வாரம் தொடங்கும்: சுற்றுலாத்துறை அதிகாரி தகவல்

சென்னை:  சென்னை தீவுத்திடலில் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் சுற்றுலா பொருட்காட்சி நடப்பது வழக்கம். 1974ம் ஆண்டு முதல் பள்ளி அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகியவற்றை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு மார்ச் மாதத்தில் முடிப்பது வழக்கம். நாளடைவில் ஜனவரி மாதத்தில் தொடங்கியது. கொரோனா காரணமாக  கடந்த இரு ஆண்டுகளாக சுற்றுலா பொருட்காட்சி நடைபெறவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு கோலாகலமாக நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தீவுத்திடலில் பொருட்காட்சி தொடங்குவதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 70 நாட்கள் நடத்தப்படும் பொருட்காட்சியில் அரசு துறைகளுக்கான அரங்குகள், பெண்கள், சிறார்களுக்கென 80க்கும் மேற்பட்ட வகையில் பல்வேறு அரங்குகள், விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறுகிறது. மேலும், ராட்டினங்கள், பொருட்கள் வாங்குவதற்கு உரிய கடைகள், தின் பண்டங்கள், உணவகங்கள், பனி உலகம், கடல்வாழ் மீன் அருங்காட்சியகம் ஆகியவையும் இடம் பெறவுள்ளது. இதற்காக 1.26 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் விடப்பட்டது.

இதில் பங்கேற்ற நிறுவனம் நீதிமன்றம் சென்றதால் டிசம்பர் 2வது வாரத்தில் துவங்க வேண்டிய பொருட்காட்சியில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும், 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வர்த்தக கண்காட்சி நேற்று தொடங்கப்படுவதாக சுற்றுலாத்துறை தெரிவித்திருந்தது.  ஆனால், தற்போது வரை பொருட்காட்சி திறப்பதற்கான பணிகள் முழுமையாக முடிவடையாததால் மேலும் ஒரு வாரம் காலமாகும் எனவும், பணிகள் முழுமையாக முடிந்த பிறகே தொடங்கக்கப்படும் எனவும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரி தகவல் தெரிவத்தார்.

Related Stories: