எக்ஸ்பிரஸ் ரயிலை வழிமறித்து தண்டவாளத்தில் நின்ற வாலிபர்-வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பரபரப்பு

ஜோலார்பேட்டை : வாணியம்பாடி ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் ஒருவர் தண்டவாளத்தின் நடுவே நின்று எக்ஸ்பிரஸ் ரயிலை தடுத்து நிறுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா மாநிலம், மங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கு சிறிது நேரம் நின்று காட்பாடி நோக்கி புறப்பட்டது.

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் ரயில் 20 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வருவதை கண்டு திடீரென தண்டவாளத்தின் நடுப்பதிக்கு சென்று நின்றார்.

இதனை கவனித்த ரயில் என்ஜின் டிரைவர்  பலத்த சத்தத்துடன் ஹாரன் அடித்தும் அந்த வாலிபர் தண்டவாளத்தை விட்டு செல்லவில்லை. இன்ஜின் டிரைவர் தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டே இருந்ததால் அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று அந்த வாலிபரை அப்புறப்படுத்தி, வாணியம்பாடி ரயில் நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்படை போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் தனது ஊர் தன்பாத் என்றும், பெயரை மாற்றி மாற்றி கூறியுள்ளார். இதனால் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த வாலிபரை வாணியம்பாடி பகுதியில் உள்ள கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். இந்த வாலிபரின் செயலால் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 10 நிமிடம் காலதாமதமாக சென்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: