கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்-வனத்துறையினர் கண்காணிப்பு

ஆனைமலை :  பொள்ளாச்சியை  அடுத்த ஆழியார் அருகே உள்ள கவியருவிக்கு நேற்று, கிறிஸ்துமஸ் விடுமுறையை  முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

பொள்ளாச்சியை  அடுத்த அழியார் அருகே உள்ள வனத்துறை கட்டுபாட்டில் உள்ள கவியருவிக்கு வரும்,  உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் குளித்து  மகிழ்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த ஜூன் மாதம் துவங்கி தென்மேற்கு பருவமழையும், அதன்பின் வடகிழக்கு பருவமழையும் என சில மாதமாக தொடர்ந்து பெய்ததால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால், கடந்த  சில மாதமாக சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்துள்ளது.

கடந்த இரண்டு வாரமாக மழை குறைவாக இருந்ததால்  அருவியில் தண்ணீர்  ரம்மியமாக கொட்டுகிறது. நேற்று முன்தினம் முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு  விடுமுறை என்பதால் கவியருவிக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை  அதிகரித்தது. இதில் நேற்று, கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை என்பதால்,  கவியருவிக்கு வந்த சுற்றுலா பயணிகளின் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக  இருந்தது. அங்கு வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், நேரம்  செல்ல செல்ல அருவியில் நெரிசல் ஏற்படாமல் குளிக்க பகுதி, பகுதியாக   அனுப்பி வைத்தனர். தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள்  பலரும் வெகுநேரம் நின்று குளித்து மகிழ்ந்தனர்.

நேற்று ஒரேநாளில் மட்டும்  சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அரையாண்டு விடுமுறையையொட்டி இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் சுற்றுலா  பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், அடர்ந்த வனத்திற்குள் விதிமீறி  செல்வதை தடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக வனத்துறையினர்  தெரிவித்தனர்.  அதுபோல் நேற்று ஆழியார்  அணைக்கு வழக்கத்தைவிட அதிகளவில் சுற்றுலா  பயணிகள்  வந்திருந்ததால், போலீசார்  ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: