வேதாரண்யம் மீனவர்களிடம் ரூ.4லட்சம் வலைகள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனத்தில் இருந்து நேற்றுமுன்தினம் மீன்பிடிக்க ஜெயபால் (30), மகாலிங்கம் (60), ராகுல் (20), லேகேஷ் (29) ஆகிய 4 பேர் ஒரு படகிலும், அதே ஊரை சேர்ந்த முனீஸ்வரன் (40), புஷ்பவனம் முகுந்தன் (20), வெள்ளப்பளம் ரவிக்குமார் (25), காளியப்பன் (28) ஆகிய 4 பேர் மற்றொரு படகிலும் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 12 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். இரவு 11 மணியளவில் அந்த வழியாக 2 படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர், அவர்களை மிரட்டி 2 படகில் இருந்த ரூ.4லட்சம் மதிப்புள்ள 900 கிலோ வலைகளை வெட்டி எடுத்து சென்று விட்டனர். கரைக்கு திரும்பிய மீனவர்கள், ஊர் பஞ்சாத்தார் மூலம் வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து கடலோர காவல்குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாண்டஸ் புயலுக்கு பின் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: