குன்றத்தூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்தது. இதனால் பாதுகாப்பு கருதி, கடந்த வாரம் ஏரியில் இருந்து, முதல் கட்டமாக 100 கன அடி தண்ணீரும், அதன்பின்னர் படிப்படியாக 3000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை சென்னை புறநகர் பகுதிகளில் வெயில் அடிக்க தொடங்கியது. இதனால் ஏரிக்கு வரும் நீர்வரத்தும் படிப்படியாக குறைய தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவின்பேரில் இன்று காலை 9.50 மணிக்கு ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 1500 கன அடியாக குறைக்கப்பட்டது.