பிரதமர் மோடியை கொலை செய்ய வேண்டும்: சர்ச்சை பேச்சுக்கு காங். மூத்த தலைவர் ராஜா பட்டேரியா கைது..!

போபால்: பிரதமர் மோடியை கொலை செய்ய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்தியப்பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா பட்டேரியா கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த ராஜா பட்டேரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்னா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்; தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மை இனத்தவர்கள் அச்சுறுத்தலில் உள்ளனர் என பேசிய அவர், அவர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி அளித்துவிடுவார் என்று குற்றம் சாட்டினார். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று விரும்பினால் பிரதமரை கொலை செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். கொலை என்பது தேர்தலில் வீழ்த்துவது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வீடியோ பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து ராஜா பட்டேரியா மீது வழக்குப்பதிவு செய்த மாநில காவல்துறை அவரது வீட்டில் வைத்து அவரை கைது செய்துள்ளது. அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் மோடியை தோற்கடிக்க முடியாததால் தான் இது போன்ற பேச்சு எழுகிறது என்று கூறியுள்ள மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இது வெறுப்பின் உச்சம் என்று சாடியுள்ளார். ஆனால் தாம் ஒரு காந்தியவாதி என்றும் மோடியை தேர்தலில் விழ்த்துவதை தான் அவ்வாறு கூறியதாகவும் ராஜா பட்டேரியா விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: