பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் கடந்த 3ம் தேதி கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி காரில் சுற்றிதிரிந்த வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற வெள்ளை பிரகாஷ் (31), ரெட்கில்ஸ் பகுதியை சேர்ந்த விக்ரமாதித்தன் (37) ஆகியோரை மடக்கி பிடித்தனர். காரை சோதனை செய்தபோது அதில் 34 நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது.
இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பாம் சரவணன் என்ற ரவுடியை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது. இவர்களை பிடிக்க முயன்றபோது தப்பி ஓடியபோது கை, கால் உடைந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 34 நாட்டு வெடிகுண்டுகளும் கொடுங்கையூர் குப்பை கிடங்கு பகுதியில் புதைத்து வைக்கப்பட்டது.