நெருங்கிவரும் மாண்டஸ் புயல்: சென்னையின் பல இடங்களில் லேசான மழை..!

சென்னை: மாண்டஸ் புயல் நெருங்கிவரும் நிலையில், சென்னையின் பல இடங்களில் லேசான மழை தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம் படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் நேற்று அது மீண்டும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றிரவு 11.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்நிலையில் மாண்டோஸ் புயலின் நகர்வு வேகம் மேலும் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு - தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 620 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி இடையே கரையை கடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மாண்டஸ் புயல் புதுச்சேரி - தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நாளிரவு கரையை கடக்கும். புயல் காரணமாக நாளை நள்ளிரவு முதல் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்றும் எச்செரிக்கை விடுத்துள்ளது. மாண்டஸ் புயல் நெருங்கிவரும் நிலையில், சென்னையின் பல இடங்களில் லேசான மழை தொடங்கியுள்ளது. தரைக்காற்று வீச்சு அதிகரிப்பதன் காரணமாக மாநகரம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

Related Stories: