அதிமுக பொதுக்குழு வழக்கில் தொடர்ந்து அவகாசம் கேட்பதா? ஓ.பி.எஸ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தொடர்ந்து கால அவகாசம் கேட்பதா என ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஜூலை 11ம் தேதி இரண்டாவதாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ்மகேஸ்வரி மற்றும் துலியா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமாசுந்தரம்,‘‘அதிமுக  கட்சி பணிகள் அனைத்தும் அப்படியே நிலுவையில் உள்ளது. எனவே   தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவாவது பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார், ‘‘எங்களது தரப்பு ஆதரவாளரான வைரமுத்துவுக்கு ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமாருக்கு உடல்நலம் சரியில்லாததால் வழக்கை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘கட்சி விவகாரம் என்பதால் வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என கூறினீர்கள்.

அதன் பிறகு தொடர்ந்து ஒத்திவைப்பு கோருகிறீர்கள்.   தொடர்ந்து கால அவகாசம் கேட்டுக்கொண்டே இருப்பீர்களா?  இது நீதிமன்றத்திற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது’’ என நீதிபதிகள் ஓ.பி.எஸ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர், வழக்கு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் என்ன நிவாரணத்தை எதிர்பார்க்கிறீர்கள்என்பது குறித்த விவரங்களை இடைக்கால மனுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: