ஆனந்தூர் அருகே சாலை தரைப்பாலம் சேதம் மேம்பாலம் கட்டித் தர வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆனந்தூர் அருகே சாலை தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால், மேம்பாலம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனந்தூர் அருகே பச்சனத்தின்கோட்டை அருகே ஆற்றின் குறுக்கே நீண்ட காலங்களுக்கு முன்பு ஒரு தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக ஆனந்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயணித்து வருகின்றனர். இந்த சாலையை மழை காலங்களில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆனந்தூர், ராதானூர், சருகனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தால், அதன் உபரிநீர் இந்த ஆற்றின் வழியாக செல்லும்போது தரைப்பாலம் மூழ்கிறது. இதனால் நடந்து செல்வோர்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

இந்த தரைப்பாலத்தை இடித்து விட்டு மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என கடந்த அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் தரைப்பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, பாலம் சேதமடைந்தது. மேலும் சாலையில் தேங்கும் தண்ணீரால் பள்ளம், மேடு ஏற்பட்டு, இதில் வாகன ஓட்டிகள் சிக்கி கிழே விழும் நிலை உள்ளது. எனவே விபத்துகளை தடுக்கும் விதமாகவும், பொதுமக்கள் அச்சமின்றி செல்வதற்கு ஏதுவாக, ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: