குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சரிந்த ராட்சத பாறைகள்: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

குன்னூர்: நீலகிரி மாவட்டம், குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல இடங்களில் ராட்சத பாறைகள் அகற்றப்படாமல் அந்தரத்தில் தொங்குகிறது. மண் அகற்றியதால் மரங்களும் அந்தரத்தில் தொங்கியது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு பெய்த கன மழை   காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நந்த கோபாலன் பாலம் பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது, அதிர்ஷ்டவசமாக அவ்வழியே வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. திடீரென மீண்டும் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது.

இதில் மரங்கள் மற்றும் ராட்சத பாறைகள் சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மலைப்பாதையில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்க துவங்கியது. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை மூடப்பட்டு வாகனங்கள் கோத்தகிரி வழியாக மாற்றம் செய்யப்பட்டது. தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு துறையினர் உதவியுடன் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

அதிகாரிகள் பல முறை தொடர்பு கொண்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பதில் அளிக்கவில்லை. தங்களிடம் உள்ள அனைத்து வாகனங்களும் பழுதடைந்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். உடனடியாக வேறு வழியின்றி வருவாய்த்துறையினர், காவல்துறையினர் இணைந்து பாறைகளை கைகளால் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சிறிய அளவிலான பாறைகள் அகற்றப்பட்டு மரங்களை அகற்றி ஒரு வழிப்பாதையாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: