கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களை வழிமறித்த யானை கூட்டம்

கோத்தகிரி: கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் வாகனங்களை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சமீப காலமாக காட்டு யானை கூட்டம் உணவு மற்றும் தண்ணீர் தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.சில சமயங்களில் தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகளில் வருவதால் மனித- விலங்கு மோதல் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று காலை குஞ்சப்பனை பகுதியில் குட்டியுடன் 2 காட்டு யானைகள் சாலையில் உலா வந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால், மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு யானைகள் சாலையோர வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் வாகனங்களை இயக்கி சென்றனர். எனவே, வனத்துறையினர் இதுபோன்று சாலைகளில் உலா வரும் காட்டு யானைகளை வாகன ரோந்து மேற்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: