காங்கிரஸ் தலைவர்களிடையே என்னை திட்டுவதில் போட்டி; ராவணன் விமர்சனத்திற்கு பிரதமர் மோடி பதிலடி

அகமதாபாத்: என்னை திட்டுவதில் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே,’ நாட்டில் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் மோடி பிரசாரம் செய்கிறார். அவர் பிரதமர் வேலையை செய்வது இல்லை. அனைத்து இடங்களிலும் தனது முகத்தை பார்த்து வாக்களிக்கும்படி கேட்கிறார். அவர் என்ன 100 தலை கொண்ட ராவணனா?’ என்று கேள்வி எழுப்பினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு பா.ஜ தொழில்நுட்ப அணி தலைவர் அமித் மாளவியா கூறுகையில்,’ குஜராத்தின் மகனை காங்கிரஸ் அவமதிக்கிறது’ என்று பதில் அளித்தார். இந்த நிலையில் 2கட்ட தேர்தல் நடைபெறும்  பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள கலோல் நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது ராவணன் விமர்சனத்திற்கு பதில் அளித்து கூறியதாவது: மோடியை யார் அதிகம் திட்டுவது என்பதில் காங்கிரஸ் தலைவர்களிடையே போட்டி நிலவுகிறது.

ராமர் இருப்பதாக ஒருபோதும் நம்பாதவர்கள், இப்போது ராமாயணத்தில் இருந்து ராவணனை  கொண்டு வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்  ஒரு காங்கிரஸ் தலைவர் மோடி நாய் போல் தெருவில் அடிபட்டு சாவார் என்றார். மற்றொருவர் மோடி ஹிட்லரைப்போல் சாவார் என்றார் . இன்னொருவர்  வாய்ப்பு கிடைத்தால்  மோடியை நானே கொன்றுவிடுவேன் என்றார். இப்போது யாரோ ராவணன் என்கிறார், யாரோ அரக்கன்  என்கிறார், யாரோ கரப்பான் பூச்சி என்கிறார்கள். என்னை இப்படி காங்கிரஸ் கட்சியினர் அழைப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. எனக்கு ஏற்பட்டு இருக்கும் ஒரே ஆச்சர்யம் என்னவென்றால் அவர்கள் இதுபோன்ற கேவலமான வார்த்தையை பயன்படுத்திய பிறகும் ஒருபோதும் மனந்திருந்தவில்லை, மன்னிப்பு கேட்கவும்  மறந்துவிட்டது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.  இந்த நாட்டின் பிரதமரை அவமதிப்பது  தங்களின் உரிமை என காங்கிரஸ் நினைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: