சென்னை ஐகோர்ட்டில் நயன்தாரா படத்துக்கு தடை கோரி மனு

சென்னை: வி ஹவுஸ் படத்தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சுரேஷ் காமாட்சி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சிம்பு நடிப்பில் உருவான ‘மாநாடு’ படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட எஸ்.எஸ்.ஐ படத் தயாரிப்பு நிறுவனத்துடன் 13 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. இந்த தொகையில் 27 லட்ச ரூபாய், ஜி.எஸ்.டி பாக்கி தொகை ஒரு கோடியே 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என, ஒரு கோடியே 31 லட்ச ரூபாயை அந்த நிறுவனம் தர வேண்டிய நிலையில், பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கோல்டு’ என்ற மலையாளப் படத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட எஸ்.எஸ்.ஐ தயாரிப்பு நிறுவனம் உரிமை வாங்கி இருக்கிறது.

எனவே, ‘மாநாடு’ படத் தின் பாக்கி தொகையை தராமல், ‘கோல்டு’ படத்தை வெளியிடுவதற்கு அந்த நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தியின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, பாக்கி தொகையை தராமல் ‘கோல்டு’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றார். அப்போது எஸ்.எஸ்.ஐ தயாரிப்பு நிறுவனம் தரப்பில், நிலுவையில் உள்ள தொகையை 90  நாட்களில் தவணை முறையில் கொடுப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. எனவே, வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: