மண்டபம் கடற்கரை பகுதியில் பிடிபட்டது போதை பொருளோ, வெடிமருந்தோ இல்லை: கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி தகவல்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை பகுதியில் பிடிபட்டது போதை பொருளோ அல்லது வெடிமருந்தோ இல்லை. விவசாய உரத்தை மிக அதிக  பணத்திற்காக இலங்கைக்கு அனுப்ப இருந்தது தெரிய வந்ததாக கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி கூறியுள்ளார். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழுமத்தின் காவல் கண்காணிப்பாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 28ம் தேதி இரவு 8 மணியளவில் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் மண்டபம் வேதாளை கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த TN-57-AA-0077 என்ற பதிவு எண் கொண்ட பஜீரோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. அந்த வாகனத்தில் கீழக்கரை சங்குளிகார தெருவை சேர்ந்த சர்பராஸ் நவாஸ் மற்றும் ஜெய்னுதீன் ஆகியோர் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 தண்ணீர் கேன்களில் சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிற பவுடர் (394 கிலோ) வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவர்கள் கொண்டு வந்த பவுடர் போதை பொருளோ அல்லது வெடிமருந்தோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் இருவரும் விவசாய உரத்தினை மிக அதிக பணமதிப்பிற்காக இலங்கைக்கு அனுப்ப இருந்தது தெரிய வந்தது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: