பொள்ளாச்சி: பொள்ளாச்சி சந்தையில் நேற்று மாடுகள் வரத்து ஓரளவு இருந்தும், வியாபாரிகள் வருகை குறைவால் மாடு விற்பனை மந்தமானது. பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட சந்தையில் வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் சந்தைநாளின்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.
இந்த மாதம் துவக்கத்திலிருந்து பல நாட்கள் மழையால், சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது. இதனால், கூடுதல் விலைக்குபோனது. கடந்த இரண்டு வாரமாக மாடுகள் வரத்து ஓரளவு இருந்தாலும், கார்த்திகை மாதத்தால், கேரள வியாபாரிகள் குறைவாகவே, மாடுகளை வாங்க வந்தனர். அதுபோல், இந்த வாரத்தில் நேற்று நடந்த சந்தை நாளின்போது, வெளி மாநிலங்களிலிருந்து மாடுகள் வரத்து ஓரளவு இருந்தாலும், விற்பனை மந்தமானது.
இதனால், காலை 10 மணிக்குள் விற்பனையாக வேண்டிய மாடுகள் பெரும்பாலும், தேக்கமடைந்தது. கடந்த வாரத்தில் ரூ.1.60 கோடிக்கு வார்த்தகம் இருந்தது. ஆனால் நேற்று, ரூ.1.40க்கே மாடு வர்த்தகம் இருந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.