விமான நிலைய புதிய மல்டி லெவல் பார்க்கிங் பகுதியில் 2 மணி நேரம் கார்கள் நிறுத்த ரூ.150 கட்டணம்; பலமடங்கு உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன 6 அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங், வரும் 4ம் தேதி ஞாயிறு அதிகாலையில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. 2 மணி நேரம் கார் பார்க்கிங் செய்ய ரூ.150 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள், வாடகை வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் புதிதாக 6 அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் ரூ.250 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கார் பார்க்கிங்கில் 2,150 வாகனங்கள் ஒரேநேரத்தில் நிறுத்த முடியும். டிசம்பர் 4ம் தேதி அதிகாலை 00.01 மணியில் இருந்து கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வரும் என்று, இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.  இதனால், மல்டி லெவல் 6 அடுக்கு புதிய கார் பார்க்கிங்கில் தான், உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்களுக்கு வரும் அனைத்து வாகனங்களும் நிறுத்த வேண்டும். இதற்கிடையே புதிய கார் பார்க்கிங்கில் கட்டணம் விகிதங்களையும் அறிவித்துள்ளனர். இது பயணிகளையும், வாகன ஓட்டிகளையும் கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பயணிகள் அதிர்ச்சி அடையும் வகையில் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் முதல் 30 நிமிடங்கள் நிறுத்துவதற்கு ரூ.20. அதற்கு மேல் இரண்டு மணி நேரம் வரை நிறுத்துவதற்கு 2 மணி நேரம் வரை நிறுத்த ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், தற்போதைய புதிய மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் இரு சக்கர வாகனங்கள் 30 நிமிடங்கள் வரை நிறுத்த அதே 20 ரூபாய் தான். ஆனால் இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் ரூ.30. அதேபோல் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தினால் ரூ.90. கார்களுக்கு 30 நிமிடத்திற்கு தற்போது, ரூ.40 வசூலிக்கப்படுகிறது. இனிமேல்  புதிய கார் பார்க்கிங்கில் 30 நிமிடங்களுக்கு ரூ.75. ஏற்கனவே உள்ள பழைய கார் பார்க்கிங்கில் 2 மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூ.100. இனிமேல் புதிய கார் பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்த ரூ.150.

 

மேலும் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை கார்கள் நிறுத்தி இருந்தால் ரூ.500. வேன், டெம்போக்களுக்கு  தற்போதைய  பார்க்கிங்கில் 30 நிமிடங்களுக்கு ரூ.40. ஆனால் புதிய பார்க்கிங்கில் 30 நிமிடங்களுக்கு ரூ.300. 2 மணி நேரம் வரை நிறுத்தினால் பழைய பார்க்கிங்கில் ரூ.110. புதிய  பார்க்கிங்கில் 2 மணி நேரம் வரை நிறுத்தினால் ரூ. 300. 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் நிறுத்தினால் ரூ.1,000. பஸ், டிரக்குகளுக்கு  ஏற்கனவே உள்ள பார்க்கிங்கில் 30 நிமிடம் வரை நிறுத்தினால் ரூ.50. தற்போதைய புதிய பார்க்கிங்கில் ரூ.600. பழைய பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் ரூ.110. புதிய பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம்  நிறுத்தினால் ரூ.600.  10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தினால் ரூ.2,000. இவ்வாறு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால், பயணிகள், வாடகை வாகனம் ஓட்டுவோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த புதிய கட்டண விகிதங்கள் வரும் ஞாயிறு (4ம் தேதி) அதிகாலை 12 மணி ஒரு நிமிடத்தில் இருந்து  அமலுக்கு வருகிறது. அதோடு, அதிநவீன மல்டி லெவல் 6 அடுக்கு கார் பார்க்கிங் பயன்பாட்டுக்கும்  வருகிறது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: