கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை 60வது மலர் கண்காட்சிக்கு தயார்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 1 லட்சம் மலர் நாற்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2023ம் ஆண்டு மே மாதம் 60வது மலர் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இதற்காக பிரையண்ட் பூங்காவில் முதற்கட்ட மலர் நாற்று நடவு செய்யும் பணி நேற்று துவங்கியது.
மொத்தம் 1,200 மலர் படுகைகள் உருவாக்கப்பட்டு பல்வேறு வகைகளை சேர்ந்த ஒரு லட்சம் மலர் நாற்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சால்வியா, டெல்பீனியம், பிங்க் ஆஸ்டர், வெள்ளை ஆஸ்டர், ஆர் நித்தோகேலம், பெல் பெர்சியா, லில்லியம், டேலியா போன்ற மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கொடைக்கானல் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பெருமாள் சாமி, பூங்கா மேலாளர் சிவபாலன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.