பெரம்பூர்: புளியந்தோப்பு, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார், அங்கு தடுப்புகளை வைத்து அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்வதை தடுத்தனர். பின்னர், இதுகுறித்து குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரிய தலைமை பொறியாளர் ராமசாமி, பகுதி பொறியாளர் வைதேகி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, கழிவுநீர் குழாய் உடைந்ததால் ராட்சத பள்ளம் ஏற்பட்டதாகவும், மழைக்காலத்தில் அதிகப்படியான அழுத்தம் கொடுத்து தண்ணீரை வெளியேற்றியதன் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே 2 முறை இந்த பகுதியில் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளத்தில் 15 நாட்கள் வரை இந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வேறு வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதே பகுதியில் மேலும் ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது.