மேட்டூர்: மேட்டூர் அருகே இந்தி திணிப்பை எதிர்த்து, திமுக தொண்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு அமைச்சர் நேரில் ஆறுதல் கூறினார். சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த பி.என்.பட்டி பேரூராட்சி 18வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல்(85) விவசாயி. இவர் நங்கவள்ளி ஒன்றிய திமுக முன்னாள் விவசாய அணி அமைப்பாளர். இவரது மனைவி ஜானகி (80). இவருக்கு மணி (58), ரத்னவேல் (55) என்ற மகன்களும், கல்யாணி (57) என்ற மகளும் உள்ளனர். திமுக ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே, கட்சி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு, முன்னாள் முதல்வர் கலைஞர் கையால் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். இந்நிலையில், ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் இந்தி திணிப்பில் ஈடுபட்டுள்ளதால், மன உளைச்சலில் இருந்தார். நேற்று பி.என்.பட்டி பேரூராட்சி திமுக அலுவலகத்திற்கு வந்தார். அப்போது பிளாஸ்டிக் கேனில் தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை, உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்துக்கொண்டார். இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என கோஷமிட்ட தங்கவேல், அதே இடத்தில் உடல் கருகி உயிழந்தார்.