தாம்பரத்தில் 1300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

தாம்பரம்: தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் ஆய்வாளர் சார்லஸ், உதவி ஆய்வாளர்கள் கன்னியப்பன், கார்த்திகேயன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாம்பரம் மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடைகளுக்கு சப்ளை செய்து வந்த பார்த்திபன் (31) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மொத்த விற்பனையாளரான மங்கல்ராம் (29), மற்றும் சிவபெருமாள் (26) ஆகியோர் குறித்து தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று தாம்பரம் அருகே காரில் வந்த மங்கல்ராம் (29), சிவபெருமாள் (26) ஆகியோரை மடக்கி பிடித்த போலீசார், காரை சோதனை செய்ததில் அதில் குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் படப்பை அருகே குடோனில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1300 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் அதற்காக பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories: