ஆந்திராவில் 2024ல் சட்டப்பேரவை தேர்தல் ஜனசேனா, தெலுங்கு தேசம் கட்சி ரத யாத்திரை மேற்கொள்ள முடிவு-‘ரூட் மேப்’ தயார்

திருமலை : ஆந்திராவில் 2024ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி ஜனசேனா, தெலுங்கு தேசம் கட்சி ரத யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதற்காக இரு கட்சிகளும் ‘ரூட் மேப்’ தயார் செய்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் வருகிற 2024ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர் கொண்டு வெற்றியை பிடிப்பதற்காக அனைத்து கட்சிகளும் இப்போது இருந்து தங்களது முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.  இதற்காக ஜனசேனா கட்சி தலைவர், நடிகர்  பவன் கல்யாண் திருப்பதியில் இருந்து மாநிலம் முழுவதும் பஸ் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, பிரத்யேகமாக பிரசார ரதம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரசார ரதத்தில் பவன் கல்யாண் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தையும் மேற்கொள்ள உள்ளார்.

இன்னும் சில நாட்களில் திருப்பதியில் இருந்து இந்த பிரசார ரதம் தொடங்க உள்ளது. இதற்காக, பவன் கல்யாண் அருகில் இருந்து தனது பிரசார ரதத்தை  வடிவமைத்துள்ளார். மாநிலம் முழுவதும்  அனைத்து தொகுதிகளையும் உள்ளடக்கியதாக ‘ரூட் மேப்’ தயாராகி வருகிறது.  இந்த சுற்றுப்பயணத்தில் கடந்த தேர்தலில் ஜனசேனாவுக்கு வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியடைந்த தொகுதிகளை முக்கியமாக குறி வைத்து பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.

 அங்குள்ள வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டு வெற்றிக்கு தேவையான வாக்கு சதவீதத்தை அதிகரிக்க ஜன சேனா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.   30 தொகுதிகளை தேர்வு செய்து பொதுக்கூட்டங்கள் நடத்தவும், தேவைப்பட்டால் பவன் பாதயாத்திரை சென்றபடி பிரசாரம் செய்ய உள்ளார். இந்த பிரசார வேன் ராணுவ வாகன தோற்றமும், பஸ்சில் ஜிபிஎஸ் கண்காணிப்புடன் கூடிய உயர் பாதுகாப்பு அமைப்பு போன்ற வசதிகளும், பஸ்சில் 360 டிகிரி சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இதேபோல், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள  திட்டமிட்டுள்ளார். 400 நாட்கள் 4 ஆயிரம் கி.மீட்டருக்கு மேல் பாதயாத்திரை மேற்கொள்ளும் விதமாக மூத்த நிர்வாகிகள் ‘ரூட் மேப்’ தயாரித்துள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜ கூட்டணியுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதுபோன்று வருகிற 2024ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் விதமாக வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கூட்டணி தொடருமா? அல்லது தனித்து போட்டியிடுவார்களா? என்பது குறித்து விரைவில் இந்த கட்சிகள் அறிவிக்க உள்ளது.

Related Stories: