திருவொற்றியூர் மார்க்கெட்டில் 24 கடைகள் அகற்றம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் 350க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் மீன் கடைகள் உள்ளன. இதில், ஒரு பகுதியில் ரூ.29 லட்சம் செலவில் நகர்ப்புற ஆரோக்கிய சுகாதார நிலையம் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால், மார்க்கெட் பகுதியில் உள்ள 24 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இடித்து அப்புறப்படுத்தினர்.

இதற்கு, அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ரவி, நிர்வாகிகள், கிருஷ்ணமூர்த்தி, கினோராஜ் ஆகியோர் தலைமையில், மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு சம்பவ இடத்திற்கு வந்து வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது, மார்க்கெட் மிகவும் பழமை அடைந்து விட்டதால் அதனை மொத்தமாக அப்புறப்படுத்திவிட்டு புதிதாக 350 கடைகள் கட்டப்படும். அதில், பாதிக்கப்பட்ட 24 கடைகளுக்கு, மாற்று கடைகள் வழங்கப்படும், என்று உறுதியளித்தார். இதனையடுத்து, வியாபாரிகள் கலைந்து சென்றனர்.  கடைகளை இடிக்கும் பணி தொடர்ந்தது.

Related Stories: