ரூ.20 ஆயிரம் கடனை கேட்டு தொல்லை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த பெண்ணால் பரபரப்பு

பெரம்பூர்: ஓட்டேரியில் ரூ.20 ஆயிரம் கடனை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்தவரால் விரக்தி அடைந்த பெண், தனக்குத்தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். ஓட்டேரி நியூ பேரன்ஸ் சாலை பகுதியை  சேர்ந்தவர் அப்துல் ஹஜீஸ். இவரது மனைவி ஷமீம் (39). இவர்களுக்கு திருமணமாகி 25 வருடங்கள் ஆகிறது. அப்துல் ஹஜீஸ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து  வருகிறார். இவர்களுக்கு ரகுமான் என்ற மகனும், தமீம் நிஷா என்ற மகளும்  உள்ளனர். மகள் தமீம் நிஷா திருமணமாகி பெரம்பூரில் வசித்து வருகிறார். குடும்ப தேவைக்காக, ஷமீம் ஓட்டேரி பழைய வாழை மாநகர் பகுதியை சேர்ந்த ஆரூண் (39) என்பவரிடம் ரூ.40 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். இதில், ரூ.20 ஆயிரம் கடனை திருப்பிக்  கொடுத்துவிட்டார். மீதி ரூ.20 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டி இருந்தது.

இதுகுறித்து, அடிக்கடி ஆரோன் போன் செய்து ஷமிமுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், உடனடியாக பணத்தை தரவில்லை என்றால் வீட்டிற்கு வந்து அசிங்கப்படுத்தி விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால், மனவேதனை அடைந்த  ஷமீம், நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாதபோது, கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு தனக்குத்தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 75 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஷமீம் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக 16வது பெருநகர குற்றவியல் நடுவர், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஷமீமிடம் மரண வாக்குமூலம் பெற்றுள்ளார். ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, ரூ.20 ஆயிரம் கடனுக்காக தொல்லை கொடுத்த ஆரூணை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: