முத்துப்பேட்டை அருகே வீட்டில் அனுமதியின்றி நாட்டு வெடி தயாரிப்பு

*வெடிகள், மூல பொருள்கள் பறிமுதல்

*ஆலை உரிமையாளருக்கு போலீஸ் வலை

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அருகே வீட்டில் அனுமதியின்றி தயாரித்த நாட்டு வெடி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆலை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர், மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் தெற்குக்காடு பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (55). இவர் தனது வீட்டில் அனுமதியில்லாமல் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து விற்பனை செய்து வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்டவரின் வீட்டில் அதிரடி சென்றனர். அப்போது போலீசார், வருவதை அறிந்த கல்யாணசுந்தரம் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதனையடுத்து போலீசார், அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பின்பகுதியில் ஓரிடத்திலிருந்து ஏராளமான நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், கல்யாணசுந்தரம் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு கிராமத்தில், அரசு அனுமதிபெற்ற வெடி தயாரிக்கும் இடத்தில் வேலை பார்த்து வருகிறார்.

வேலை இல்லாத நேரத்தில் மூலப்பொருட்கள் வாங்கி வந்து தனது வீட்டின் பின்புறம் மினி தொழிற்சாலை அமைத்து நாட்டு வெடி தயாரித்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் வெடி வகைகளை இப்பகுதியில் நடைபெறும் கோயில் திருவிழா, கும்பாபிஷேகம், திருமணம், நல்லது, கெட்டது போன்ற நிகழ்வுகளுக்கு நீண்டகாலமாக விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்த சோதனையில் அங்கிருந்து சனல் நாட்டு வெடிகள், சனல் பைப் வெடிகள், பேப்பர், சாட் வெடிகள், திரி பேப்பர், சரவெடிகள் மற்றும் அதன் மூலப்பொருட்கள் ஆகியவை கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. அனுமதியில்லாமல் வெடி பொருட்களை தயாரித்த சம்பந்தப்பட்ட கல்யாணசுந்தரத்தை தீவிரமாக தேடி வருகிறோம் என்றனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்யாணசுந்தரத்தை ேதடி வருகின்றனர். சட்டவிரோதமாக நாட்டு வெடி தயாரித்த சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: