தஞ்சாவூர்: தஞ்சையில் ரூ.20 கோடி செலவில் சீரமைக்கப்பட்ட காமராஜர் மார்க்கெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தஞ்சையில் மிகப் பழமையான காமராஜர் மார்க்கெட் பழுதடைந்த நிலையில் இருந்தன. இதனை மாநகராட்சி நிர்வாகம் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி செலவில் மறு உருவாக்கம் செய்யப்பட்டன. தற்போது 201 சிறிய அளவு கடைகளும், 87 பெரிய அளவு கடைகளும் உள்ளன. மேலும் மழைநீர் வடிகால் வசதி, வாகனம் நிறுத்துமிடம், திடக்கழிவுகளை கையாளும் வசதி, சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதி, மின் வசதி, தீயணைப்பு வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய காமராஜர் மார்க்கெட்டை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். அப்போது தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.