என் அந்தஸ்து குறித்து பேசுவதை விட்டுவிட்டு, வளர்ச்சி அரசியலை எதிர்க்கட்சிகள் பேச வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

சூரத்: என் அந்தஸ்து குறித்து பேசுவதை விட்டுவிட்டு, வளர்ச்சி அரசியலை எதிர்க்கட்சிகள் பேச வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம், ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ளது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி மேற்கொண்டார். சுரேந்திர நகரில் நடைபெற்ற பாஜக பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி; ஒரு காலத்தில் சைக்கிளை கூட தயாரிக்காத மாநிலமாக இருந்த குஜராத், தற்போது விமானத்தை தயாரிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது.

நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் 80 சதவீதம் குஜராத்தின் பங்களிப்பு என்றும், அந்த உப்பை தின்றுவிட்டு சிலர் துஷ்பிரயோகம் செய்வதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார். அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக பாத யாத்திரை நடத்துகிறார்கள். பாதயாத்திரை மேற்கொள்பவர்களை இந்த தேர்தலில் குஜராத் மக்கள் தண்டிப்பார்கள். நர்மதா திட்டத்தை 40 ஆண்டுகளாக வழக்குகள் மூலம் முடக்கி, 40 ஆண்டுகளாக குஜராத்தை தாகத்தில் தவிக்கவைத்தவர்கள் காங்கிரசுடன் இணைந்துள்ளானர். நர்மதா திட்டத்திற்கு எதிராக செயல்பட்ட மேதா பட்கர் போன்ற நர்மதா ஆர்வலர்கள் ராகுலுடன் கைகோர்த்துள்ளனர்” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர்; “எனக்கு எந்த அந்தஸ்தும் இல்லை, நான் அவர்களைப் (காங்கிரஸ்) போல ராயல் அல்ல, நான் உங்களில் ஒருவன், மக்கள் சேவகன்; என் அந்தஸ்து குறித்தெல்லாம் பேசுவதை விட்டுவிட்டு, வளர்ச்சி அரசியலை அவர்கள் பேச வேண்டும்” என்றும் கூறினார்.

Related Stories: