மீனுக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பது தொடர்பாக மீன்வளத்துறை ஆலோசித்து வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மீனுக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பது தொடர்பாக மீன்வளத்துறை ஆலோசித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தெற்கு மாவட்ட திமுக மீனவர் அணி சார்பில் உலக மீனவர் தினத்தையொட்டி, சென்னை அடுத்த கொட்டிவாக்கம் குப்பத்தில் மீன் விற்பனை செய்யும் மகளிருக்கு, வியாபாரம் செய்வதற்கு பயன்படும் குடைகள், ரூ.1,000 நிதியுதவி, 400 பெண்களுக்கு புத்தாடைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதில், உலகளவில் மக்களுக்கு 25 சதவீத புரதம் மீன்களிலிருந்தே கிடைக்கிறது என்று கூறினார். மீன் உணவு பார்வைத் திறனை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. நானும் ஒரு மீனவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். 63 வயதிலும் எனக்கு பார்வை குறையவில்லை.

25 ஆண்டு கால நீரிழிவு நோயாளி என்றாலும் எனக்கு கண்ணாடி தேவைப்படவில்லை. காரணம் மீன் உணவு அதிகம் எடுத்து கொண்டதுதான் என்றார். தற்போது அமைச்சராக இருப்பது தனிப்பட்ட எனக்கான வாய்ப்பு அல்ல, மிக மிகப் பின்தங்கிய ஒரு சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பாக கருதுகிறேன் என்று குறிப்பிட்ட அமைச்சர், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பது போல், மீனுக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பது தொடர்பாக மீன்வளத்துறை ஆலோசித்து வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: