மயிலாடும்பாறை-மல்லபுரம் மலைச்சாலையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?: மலைக்கிராம மக்கள் எதிர்பார்ப்பு

வருசநாடு: தேனி- மதுரை ஆகிய இரு மாவட்டங்களை இணைக்கும் சாலை மயிலாடும்பாறை-மல்லபுரம் மலைச்சாலை. அதனால், இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இப்பகுதியில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மல்லப்புரம் பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் வாகனங்கள் செல்லுகின்ற பொழுது இடதுபுறம், வலதுபுறம் ,மலைகளின் சாலையில் ஆங்காங்கே சறுக்கு ஏற்படுகிறது.

இதனால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சிலவேளைகளில் வாகனங்கள் தடுமாறி மலைகளில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக வருசநாடு பகுதி மக்கள் வனத்துறை சார்பாக மலப்புரம் சாலையை சீரமைக்க கோரி அதிமுக ஆட்சியில் கோரிக்கை வைத்தனர். அப்போதிருந்த வனத்துறையினர் இதனை கண்டுகொள்ளவில்லை.

மயிலாடும்பாறை பகுதிகளில் விளைகின்ற விவசாய விலை பொருட்களான தக்காளி ,அவரை, பீன்ஸ் ,கொத்தவரை, பூசணி போன்ற காய்கறி பயிர்களை உசிலம்பட்டி, பேரையூர், சிவகங்கை, திருநெல்வேலி ,போன்ற பகுதிகளுக்கு மலப்புரம் மலைச்சாலை வழியாக கொண்டு செல்கின்றனர். இந்த சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதினால் விவசாய பொருட்களை குறிப்பிட்ட நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் ஒவ்வொரு நாளும் விவசாயிகள் சிரமப்பட்டு வருகிறார்கள் சிலவேளைகளில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி அடுத்த நாள் செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வருசநாடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி வேல்முருகன் கூறுகையில், ‘‘வருசநாடு பகுதியில் இருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பேரையூர், மலப்புரம், பகுதிகளுக்கு செல்வது இயல்பாக இருக்கிறது. இந்த சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. ஆங்காங்கே தடுப்புச்சுவர் கட்டாமல் இருப்பதினால் விபத்துக்குள்ளாகி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: