கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. 150வது பிறந்தநாள் சிறப்பு மலர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளையொட்டி சிறப்பு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட “வ.உ.சி. 150வது பிறந்த ஆண்டு சிறப்பு மலர்” நேற்று வெளியிடப்பட்டது. இதை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், வ.உ.சி. எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்து பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலக இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள வ.உ.சி.யின் 150வது பிறந்த ஆண்டு சிறப்பு இணையப் பக்கத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் நீரஜ் மித்தல், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் சண்முகம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாள் விழாவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு தமிழக சட்டப் பேரவையில் வெளியிட்ட 14 அறிவிப்புகளில், “தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வாயிலாகக் ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்து பிரதிகள் இணையத்திலே மின்மயப்படுத்தி வெளியிடப்படும்’’ என்று கூறியிருந்தார்.

அதன்படி, வ.உ.சிதம்பரனார் மறைந்த நவ.18ம் தேதி தியாகத் திருநாளாக அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் எழுதிய நூல்கள், அவர் தொடர்புடைய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், ஒளிப்படங்கள் மற்றும் இதர ஆவணங்கள் போன்றவை பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு மொத்தம் 127 ஆவணங்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் மின்னுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

அதில் வ.உ.சி எழுதிய 11 நூல்கள், 7 பதிப்புகள், உரை எழுதிய 3 நூல்கள், மொழியாக்கம் செய்யப்பட்ட 4 நூல்கள், அதேபோல், வ.உ.சி. பற்றிய 20 வரலாற்று நூல்கள், 6 நூற்றாண்டுப் பதிவுகள், 2 மலர்கள், அவர் குறித்த கட்டுரைகள் அடங்கிய ஒரு தொகுப்பு, 5 ஆய்வு நூல்கள் மற்றும் 6 பிற நூல்கள் மற்றும் வ.உ.சி. பற்றிய 7 கையெழுத்துப் பிரதிகள், 17 ஒளிப்படங்கள், ஒளி - ஒலி ஆவணங்கள், 38 பிற ஆவணங்கள் மற்றும் வாழ்க்கைக் குறிப்பு ஆகியவை மின்னுருவாக்கம் செய்யப்பட்டு, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலக இணையதளத்தில் வ.உ.சி.யின் 150வது பிறந்த ஆண்டை முன்னிட்டு சிறப்பு இணையப் பக்கமாக (www.tamildigitallibrary.in/voc) உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், வ.உ.சிதம்பரனார் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் மின்மயப்படுத்தும் முயற்சியில் தமிழ் இணையக் கல்விக்கழகம் ஈடுபட்டுள்ளது.

Related Stories: