வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதன் எதிரொலி: வேதாரண்யம் மீனவர்கள் 5,000 பேர் கடலுக்கு செல்லவில்லை..படகுகள் கரையில் நிறுத்தம்..!!

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவளம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் தங்களது ஃபைபர் படகுகள், மீன்பிடி வலைகளை கரையில் பாதுகாப்புக்காக விரித்து வைத்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதியே வெறிச்சோடி காணப்படுகிறது.

இதேபோல மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் சீர்காழி அருகே பழையார், குட்டையாமேடு, குவையார், தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி, தரங்கம்பாடி உள்ளிட்ட 20 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 30,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 10 ஆயிரம் விசைபடகுகள் மற்றும் ஃபைபர் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். கடலுக்கு செல்லாததால் அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். முகத்துவாரம் மண்மேடாக மாறியுள்ளதால் தூர்வாரவும் கூறியுள்ளனர்.

Related Stories: