ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகர்புற நக்சலைட்டுகள் அதிகரிப்பை கண்காணிக்க அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நக்சலைட்டுகளின் தோற்றம், இடதுசாரி தீவிரவாதத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் நகர்புற நக்சலைட்டுகள் அதிகரிப்பதை கண்காணித்து கட்டுப்படுத்துதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பயிற்சி வகுப்பு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது.
இப்பயிற்சியில் தமிழ்நாட்டில் சிறப்பு இலக்குபடையின் பணிகள் மற்றும் இடதுசாரி தீவிரவாதம், நகர்புற நக்ஸலிசம் பரவாமல் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
தமிழ்நாடு சிறப்பு இலக்குப் படையினருக்கு வருவாய்த்துறையினர் வழங்க வேண்டிய ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பொதுமக்கள் பிரச்னைகளில் ஈடுபடும் புரட்சி இயங்கங்கள் மற்றும் அதன் உறுப்பினர்களை கண்காணிக்க வேண்டும். இவர்களால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தெரிய வந்தால் அதுகுறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிரடிப்படை சார்பில் ஒரு காவல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். நகர்புற நக்சல்களை கண்டறிதல், அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டறிந்து மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள நக்சல்களுக்கு என நியமிக்கப்பட்டுள்ள அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த பயிற்சி முகாமில் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வினோத்குமார், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (நீதியியல்) விஜயகுமார் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.