சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலீஜியம் குழு பரிந்துரை

சென்னை: சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது. நீதிபதி முரளிதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க ஒன்றிய அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை. ஒன்றிய அரசு இன்னும் ஒப்புதல் தராததால் உயர்நீதிமன்றத்துக்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதியே நியமிக்க வாய்ப்பு உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த முனீஸ்வர் நாத் பண்டாரி செப்டம்பர் 12ம் தேதி ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எம்.துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 21ம் தேதியுடன் அவரும் ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா செப்டம்பர் 22ம் தேதி பொறுப்பேற்றார்.

இந்நிலையில் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜாவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முரளிதரனை நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைத்துள்ள நிலையில், இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Related Stories: