கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் வகுப்புகளை தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இ.சி.ஆர். சர்வதேச பள்ளியில் மாணவி மரணத்தையடுத்து கடந்த ஜூலை 17ம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி உடமைகளை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த ஆய்வுக் குழு ஆய்வு செய்துள்ளதாகவும் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் சிலம்பண்ணன்; சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதாக தெரிவித்தார். இதனையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வகுப்புகளை நடத்த தயார் நிலையில் பள்ளி உள்ளதாகவும், பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில்லை எனவும் குறிப்பிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்று பள்ளிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். ஒரு மாதத்துக்கு பின்னர் மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். பள்ளிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவு. கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பள்ளிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவ.21க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: