மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோயிலில் பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை பாரத ஸ்டேட் வங்கி மேலாளரிடம் அமைச்சர்கள் அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் ஒப்படைத்தனர்

சென்னை: மாங்காடு, அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயிலில் 39 கிலோ 704 கிராம் எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை பாரத ஸ்டேட் வங்கி மண்டல  மேலாளரிடம்  அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் பி.கே.சேகர்பாபு  ஆகியோர் ஒப்படைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 39 கிலோ 704 கிராம் எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் ஒய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜு முன்னிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளரிடம் ஒப்படைத்தனர்.

2021-2022 ஆம் ஆண்டிற்கான  சட்டமன்ற மானியக்கோரிக்கையின் போது, கடந்த 10 ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத்தங்கமாக மாற்றி திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வுபெற்ற  நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்“ என அறிவிக்கப்பட்டது.

இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் சென்னை மண்டலத்திற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜூ அவர்கள் தலைமையில் குழு அரசால் அமைக்கப்பட்டது. அதன்படி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியலிலும், காணிக்கையாகவும் செலுத்தப்பட்ட பலமாற்றுப் பொன் இனங்கள் சுத்த தங்கமாக மாற்றப்பட்டு தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

இதன் மூலம் கிடைக்கப்பெறும் வட்டித்தொகை அந்தந்த திருக்கோயில்களின் மேம்பாட்டிற்காக செலவிடப்படும். அதன் தொடர்ச்சியாக, மாங்காடு, அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயிலுக்கு  பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட  பலமாற்று பொன் இனங்களிலிருந்து கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் இதர உலோகங்களை  நீக்கி, நிகர பொன்னினை கணக்கிடும் பணியானது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜு அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அதன்படி திருக்கோயிலுக்கு பயன்படுத்த இயலாத நிலையில் கிடைக்கப்பெற்ற பலமாற்று பொன் இனங்கள் மொத்த எடை 39 கிலோ 704 கிராம் சுத்த தங்கமாக மாற்றி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜு முன்னிலையில்  சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, ஆகியோர் பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கும் வகையில் அதன் அம்பத்தூர் மண்டல மேலாளர்ராஜலட்சுமி அவர்களிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்தரமோகன்,  கூடுதல் ஆணையர் இரா.கண்ணன், இணை ஆணையர் ஆர்.செந்தில் வேலவன், திருக்கோயில் பரம்பரை தர்மகர்த்தா டாக்டர் மணலி ஆர்.சீனிவாசன், திருக்கோயில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பெ.க.கவெனிதா மற்றும் அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

Related Stories: