திருச்சுழி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேக்கம்

திருச்சுழி: திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை விவசாயிகள், பொதுமக்கள் வளர்த்து வருகின்றனர். இந்த பகுதிகளில் வளர்க்கப்படும் மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு திருச்சுழியில் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர். குறிப்பாக திருச்சுழி, தமிழ்பாடி, சித்தலக்குண்டு, கேத்தநாயக்கன்பட்டி, சித்தலக்குண்டு, கண்டமங்கலம், உடையனாம்பட்டி, சென்னிலைகுடி, பள்ளிமடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சுழி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் மழை யால் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அங்கு கால்நடைகளை கொண்டு சென்று நிறுத்தி வைக்க போதுமான வசதிகள் இல்லாததால் சிரமம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், மழைக் காலங்களில் பாம்பு உள்ளிட்ட விஷபூச்சிகள் மருத்துவமனை வளாகத்தில் நுழைந்து விடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், கட்டிடங்களும் சேதமடைந்துள்ளது. எனவே, சேதமடைந்த கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை அதிகாரிகள் உடனடியாக கவனித்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்காத வகையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு நிழற்கூடங்களை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: