சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய 15ம் தேதி கடைசி நாள்

சென்னை: வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: 2022-23ல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வழங்கப்பட்டு, மாநில அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்ட போதிலும் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செப்.15ம் தேதி முதல் நடக்கிறது. இதுவரை சுமார் 22 லட்சம் விவசாயிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் சம்பா நெற்பயிருக்கான காப்பீடு தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நவ.15ம் தேதி முடிகிறது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முழுவீச்சில் இயங்க வேளாண்மை - உழவர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் நவ.15ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: