அதி கனமழை எச்சரிக்கை எதிரொலி சென்னை, திருவள்ளூர், காஞ்சி உள்ளிட்ட 7 மாவட்டத்தில் பேரிடர் மீட்புக்குழு தயார்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

சென்னை: அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ராணிப்பேட்டை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உள்ளது என்றும், இது மேலும் வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி இன்று முதல் நாளை வரை நகரக் கூடும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்றும், இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நாளை வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, கனமழையினை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

கன மழை முதல் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் 42 வீரர்களை கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 50 வீரர்களை கொண்ட 2 குழுக்கள் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 குழு வீதம் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் நிலைநிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: