ஆனைமலை: பரம்பிக்குளம் அணையில் புதிய ஷட்டர் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பாரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்திற்குட்பட்ட(பிஏபி) கேரள எல்லையில் அமைந்துள்ள 72அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையில், தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் கடந்த செப்டம்பர் 21ம் தேதி அதிகாலை அணையில் உள்ள இரண்டாவது மெயின் ஷட்டர் உடைந்தது. இதன் காரணமாக, ஆயிரகணக்கான கன அடி தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து, பரம்பிக்குளம் அணையில் போர்கால அடிப்படையில் புதிய ஷட்டர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரூ.7.20 கோடியில் இரும்பாலான புதிய ஷட்டர் அமைக்கும் பணி 3 வாரத்துக்கு முன்பு துவங்கப்பட்டது.