திண்டுக்கல் வரும் பிரதமர் மோடியின் பயண திட்டத்தில் திடீர் மாற்றம்?.. மதுரையில் இருந்து காரில் செல்ல திட்டம் என தகவல்..!

திண்டுக்கல்: தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் திண்டுக்கல் வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது. இந்த விழாவில் பகலந்துகொள்ள பிரதமர் மோடி பெங்களுருவில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு வருகை தந்து மீண்டும் தனி ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராம பல்கலைக்கழகம் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட தளத்தில் இறங்கி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் காலையில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக அப்பகுதியில் பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் ஹெலிகாப்டர் வந்து இறங்குவதில் தொய்வு ஏற்படும். இதே நிலை நீடித்தால் மதுரை விமான நிலையத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படலாம் என அதிகாரிகள் கூறி வருகின்றனர். மதுரையில் இருந்து 58 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்துக்கு சாலை மார்க்கமாக காரில் வருவதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி 3.30 மணி அளவில் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: