கடலில் மூழ்க தொடங்கிய கப்பல்: நடுக்கடலில் தத்தளித்த 306 இலங்கைத் தமிழர்களை மீட்ட சிங்கப்பூர் கடற்படை

கொழும்பு: கப்பல் பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த இலங்கைத் தமிழர்களை சிங்கப்பூர் கடற்படை மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள், அகதிகளாக வேறு நாடுகளுக்கு செல்லும் நிலை நீடிக்கிறது. புகலிடம் தேடி கனடா நோக்கி சரக்கு கப்பலில் இலங்கை தமிழர்கள் 300க்கும் அதிகமானோர் சென்ற போது கப்பல் மூழ்கத்தொடங்கியது.

பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் இடையே விபத்துக்குள்ளான கப்பலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்களும் பயணித்துள்ளனர். இதனை அறிந்து இலங்கையை சேர்ந்த ஒருவர் இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டு நாங்கள் 306 பேர் நடுக்கடலில் ஆபத்தான நிலையில் உள்ளோம். நாங்கள் சென்ற கப்பல் கடலில் மூழ்கும் நிலையில் உள்ளது என தெரிவித்தார்.

இதனையடுத்து கொழும்புவில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சார்பில் சிங்கப்பூர், வியட்நாம், மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படையை தொடர்பு கொண்டு நடுக்கடலில் சிக்கியவர்களை மீட்க இலங்கை அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் சிங்கப்பூர் கடற்படை அந்த கப்பலையும், கப்பலில் பயணித்த 306 பயணிகளையும் பத்திரமாக மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் 306 பேரையும் பத்திரமாக வியட்நாம் கொண்டு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார். இன்று நள்ளிரவு 1 மணி அளவில் அந்த கப்பல் வியட்நாமை அடையும் என கூறப்படுகிறது. அதன் பிறகு தான் அந்த கப்பலில் பயணித்தவர்களின் விவரம் தெரிய வரும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: